.jpg)
இந்தியாவின் கபிலவஸ்துவிலிருந்த புத்தர் பெருமானின் புனித சின்னங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற வைபவமென்றின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்புனிதச் சின்னங்களை பொறுப்பேற்றார்.
இந்திய விமானப்படையின் விசேட விமானமொன்றின் மூலம் இச்சின்னங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்திய கலாசார அமைச்சர் குமாரி சேல்ஜா இவற்றை கொண்டுவந்தார். 1978 ஆம் ஆண்டிற்குப்பின் இவை இலங்கைக்கு கொண்டுவரப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
இப்புனிதச் சின்னங்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் இந்தியாவில் கௌத்தம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல இடங்களில் உள்ள பௌத்த பிக்குகள் டில்லி விமானப்படைத் தளத்தில் விசேட பூஜைகளை நடத்தினர். இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவஸம் மற்றும் இலங்கை உயர்தானிகராலய அதிகாரிகள் பலர் இப்பூஜைகளில் கலந்துகொண்டனர்.
பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இப்புனிதச் சின்னங்கள் கொண்டுவரப்பட்டவுடன் மகாநாயக்க தேரர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் பிரித் ஓதினர்.
'இப்புனிதச் சின்னங்களை கொண்டுவந்தமைக்காக நன்றி கூறுகிறேன்' என இந்திய கலாசார அமைச்சர் சேல்ஜாவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விமான நிலையத்திலிருந்து களனி மானல்வத்த விகாரைக்கு இச்சின்னங்கள் கொண்டுசெல்லப்பட்டன. செப்டெம்பர் 4 ஆம் திகதிவரை அவை அங்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
'கபிலவஸ்து புனிதச் சின்னங்கள்' என அழைக்கப்படும் இச்சின்னங்கள் பீஹார் மாநிலத்திலுள்ள புராதன கபிலவஸ்து நகரம் என கருதப்படும் பகுதியில் 1898 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவுக்கு வெளியே 1978 ஆம் ஆண்டு இச்சின்னங்கள் முதல் தடவையாக இலங்கைக்க கொண்டுவரப்பட்ன. 1993 இல் மொங்கோலியாவிலும் 1994 ஜூலையில் சிங்கப்பூரிலும் 1995 இல் தென்கொரியாவிலும் 1996 இல் தாய்லாந்திலும் இவை பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இப்புனிதச் சின்னங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த இந்திய அதிகாரிகள் அவற்றை இந்திய தேசிய நூதனசாலையில் வைத்திருப்பதற்கும் இந்தியாவுக்கு வெளியே அவற்றை அனுப்புவதில்லை எனவும் தீர்மானித்தனர்.
எனினும் இப்புனிதச்சின்னங்களை வழிபடுவதற்கு இலங்கை மக்களுக்கு வாய்ப்பளிக்கும் முகமாக அவற்றை இலங்கைக்கு அனுப்புமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 ஆம் ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கிணங்க ஒரு விதிவிலக்காக அவற்றை இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசாங்கம் தீர்மானித்தது. (த ஹிந்து)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !