அவரது உரை சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
திவயின பத்திரிகையின் ஊடகவியலாளரான சி.ஏ.சந்திரபிரேம எழுதியுள்ள ‘கோட்டாவின் யுத்தம்’ என்ற நூல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்துத் தெரிவித்ததாவது,
“யாருடைய யுத்தம்? கோட்டாவின் யுத்தம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நூலின் உபதலைப்பானது தமிழர்கள் புலிகளுக்கு சமமானவர்கள், புலிகள் பயங்கரவாதத்துக்கு சமமானவர்கள் எனக் கூறுகிறது.
நீங்கள் யுத்தத்தைப் பற்றி புத்தகம் எழுதலாம். நான் அதைப்பற்றி பேச முற்படவில்லை. இங்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ள மொழிப்பிரயோகம் பற்றியே நான் இங்கு பேசுகிறேன்.
நீங்கள், தமிழ்ப் புலி பயங்கரவாதிகள் என்று கூறியிருக்கிறீர்கள். இவ்வாறான எண்ணப்பாடு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிவகுக்காது.
அண்மையில் தமிழ்ப் பிரதேசங்களில் கடமையாற்றிய தமிழ் அரசாங்க அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த இடங்களுக்கு தமிழ் மொழித் தேர்ச்சியில்லாத அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழனன்று மன்னார் அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தோம்.
திருகோணமலை மாவட்டத்துக்கு தமிழ் மொழியில் தேர்ச்சியில்லாத ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியொருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை ஆளுநர்களாகக் கொண்ட இரண்டு மாகாணங்கள் என்றால் அவை வடக்கும் கிழக்குமேயாகும். இது ஏன்?
யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்களாகியும் நல்லிணக்கம் குறித்து பேசப்படுகிறதே தவிர நடைமுறையில் இல்லை.
நீங்கள் வடக்கு, கிழக்கு மக்களை இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே விரும்புகிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !